Tamil

தம்புள்ளையில் அமைந்துள்ள விவசாய தொழில்நுட்ப பூங்காவுடன் விவசாய சுற்றுலாவில் நுழையும் DIMO

DIMO நிறுவனத்தின் விவசாய பிரிவான DIMO Agribusinesses, விவசாய சுற்றுலாவில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் முகமாக தம்புள்ளையில் அமைந்துள்ள தனது விவசாய தொழில்நுட்ப பூங்காவை (நாட்டின் மத்திய பகுதி) தெரிவு செய்துள்ளது.

DIMO Agribusinesses ஆனது 3 விவசாய தொழில்நுட்ப பூங்காக்களை தம்புள்ளை (நாட்டின் மத்திய பகுதி), நிக்கவரெட்டிய (நாட்டின் கீழ் பகுதி) மற்றும் லிந்துலை (மலை நாடு ஈர வலயம்) ஆகிய இடங்களில் கொண்டுள்ளது. அவை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, விதை உற்பத்தி, விவசாயிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இயங்கும் அதே நேரத்தில், தத்தமது பிராந்தியத்தில் மாதிரி பண்ணைகளாகவும் செயல்படுகின்றன.

விவசாய அடிப்படையிலான விடுமுறை அனுபவத்தில் ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இந்த பூங்காக்கள் வழியாக விவசாய சுற்றுலா சந்தையில் நுழைய நிறுவனம் விரும்புகிறது. இந்த விவசாய தொழில்நுட்ப பூங்காக்களுக்குள் அமைந்துள்ள ஆடம்பர கபனாக்கள் அல்லது விடுமுறை பங்களாக்களில் தங்கியிருக்கும் போது, நாட்டின் விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறை குறித்த நேரடி அறிவும் அனுபவமும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும். இந் நிறுவனம் அண்மையில் தம்புள்ளை விவசாய தொழில்நுட்ப பூங்காவிற்குள் இரண்டு சொகுசு மரமனைகளை அதிகாரபூர்வமாக திறந்துள்ளதுடன், விரைவில் செயற்பாடுகளை தொடங்க எதிர்பார்க்கிறது.

DIMO தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர், ரஞ்சித் பண்டிதகே, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,”விவசாய சுற்றுலா என்பது ஒரு பரந்த பகுதியென்பதுடன், இது இந்த துறையில் எங்கள் முதல் முயற்சியாகும். இந்த திட்டத்திற்காக தம்புள்ளையில் உள்ள எங்கள் விவசாய தொழில்நுட்ப பூங்காவை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். ஏனெனில், இது உயர் தொழில்நுட்ப விவசாய வசதிகளுடன் கூடியதென்பதுடன், இது பேண்தகு விவசாயத்தை மேம்படுத்துகின்றது. மேலும், ஒரு அழகான இடத்தில் அமைந்துள்ளமையானது, சுற்றுலா பயணிகளுக்கு உண்மையான விவசாய அனுபவத்தை வழங்க ஏதுவாக அமைந்துள்ளது,”என்றார்.

DIMO குழும பிரதம நிறைவேற்று அதிகாரி, கஹநாத் பண்டிதகே, கருத்து தெரிவிக்கையில்,”எதிர்கால சுற்றுலாத் துறையில் விவசாய சுற்றுலா ஒரு முக்கிய காரணியென்பதுடன்,  பல நாடுகள் இந்த பகுதியில் அதிக கவனம் செலுத்துகின்றன. இலங்கையும் இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இந்த வகையான முயற்சிகள் நிறுவனங்களின் இலாபத்தில் சாதகமான செல்வாக்கைச் செலுத்துவதுடன், இந்தத் துறையில் DIMO தனது தடத்தை பதித்திருப்பது மிகவும் நல்லதாகும்,” என்றார்.

DIMO பணிப்பாளர்/ சி.எம்.ஓ, அசங்க ரணசிங்க, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,” இது DIMOவின் வணிகங்களை மாற்றியமைப்பதற்கான மற்றொரு மைல்கல்லாகும். நாங்கள் விவசாய துறையில் ஒரு தீவிரமான வளர்ச்சிப் பயணத்தில் உள்ளதுடன், இந்த திட்டம் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தும். விரைவில் நாங்கள் விவசாய வெளியீட்டு சந்தையில் நுழைவதுடன், நாட்டின் மூலோபாய முக்கியத்துவம் மிக்க இடங்களில் இதே போன்ற விவசாய தொழில்நுட்ப பூங்காக்களை ஸ்தாபிப்பதற்கு எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

DIMO விவசாய விசேட திட்டங்களுக்கான பொது முகாமையாளர், பிரியங்க தெமட்டாவ, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,”தம்புள்ளை விவசாய தொழில்நுட்ப பூங்காவானது, DIMO வின் முதலாவது விவசாய தொழில்நுட்ப பூங்காவாகும். இலங்கையில் விவசாய உற்பத்தியின் தரத்தை மேம்படுத்த காய்கறி விதை சோதனைகள் (உள்ளூர் / இறக்குமதி, திறந்த மகரந்த / கலப்பின) உரம், பயிர் பராமரிப்பு மற்றும் விவசாயம் சார்ந்த சோதனைகளை இது நடத்துகிறது. இந்த நிலையமானது, பசுமை இல்லங்கள் மற்றும் மைக்ரோ பாசன அமைப்புகள், காய்கறி விதை தொழில்நுட்ப பிரிவு மற்றும் பழத் தோட்டங்கள் நிறைந்த ஒரு உயர் தொழில்நுட்ப மாதிரி பண்ணையையும் கொண்டது. இது விவசாயத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும். இரண்டு ஆடம்பர மரமனைகளும் வியாபாரத்திற்கென திறந்தவுடன், அவை வாடிக்கையாளர்களுக்கு உண்மையான விவசாய சுற்றுலா அனுபவத்தை வழங்கும். நகர்ப்புற விவசாய ஆர்வலர்கள் நவீன மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளைக் கற்கும் அதேவேளை தாவர மற்றும் விதை காப்பகம், காய்கறி பண்ணைகள் மற்றும் பழத் தோட்டங்களை வசதியாக அனுபவிக்க முடியும்,” என்றார்.

இந்த விவசாய தொழில்நுட்ப பூங்காவானது மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. விவசாய நடைமுறைகள், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் புத்தாக்க வலையமைப்பை இந்த நிலையம் ஊக்குவிப்பதுடன் மேம்படுத்தவும் செய்கின்றது. இது தாவர உற்பத்தி, விவசாய வணிகங்கள் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி ஆகிய துறைகளில் நிறுவப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் நிபுணத்துவத்தை ஒன்றிணைக்க ஓர் ஒருங்கிணைப்பு நிலையமாக செயல்படுவதன் மூலம் அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. இது விவசாயத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்ட காய்கறி மற்றும் பழ தாவரங்களின் நடவுப் பொருட்களையும் வழங்கும்.இந்தப் பூங்காவானது விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொடர்புடைய சாராருக்கு அறிவுப் பகிர்தல் நிலையத்தையும் கொண்டிருக்கும்.

Share

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *